சென்னை: ஜாம்ஷெட்பூர் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்த்தை(என்ஐடி) சேர்ந்த 4 மாணவர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை அமேசான் நிறுவனம் அளித்துள்ளது.
இந்த என்ஐடியைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.27 லட்சம் சம்பளம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு இந்த அழைப்பு விடுத்துள்ளது அமேசான் நிறுவனம்.
ஜாம்ஷெட்பூர் என்ஐடி நிறுவனத்தில் நேற்று கேம்பஸ் இன்டர்வியூ எனப்படும் வளாகத் தேர்வுகள் நடைபெற்றன. நாட்டின் முன்னணி நிறுவனங்கள் இந்த வளாகத் தேர்வில் கலந்துகொண்டு மாணவர்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்தன.

அதன்படி என்ஐடி-யைச் சேர்ந்த சுமித் சின்ஹா, பங்கஜ்குமார், சுபம்குமார், சவ்யாஸ்ச்சி ஆகியோருக்கு ஆண்டுக்கு ரூ.27 லட்சம் ஊதியம் என்ற அடிப்படையில் அவர்களை அமேசான் நிறுவனம் தேர்வு செய்தது. இவர்கள் அனைவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனம் ரூ.67 லட்சம் சம்பளம் என்ற அடிப்படையில் என்ஐடி மாணவர்கள் 2 பேரைத் தேர்வு செய்தது.
இந்த ஆண்டில் இப்போது 4 மாணவர்களை அமேசான் தேர்வு செய்துள்ளது. வளாகத் தேர்வில் மொத்தம் 41 மாணவர்கள் பல்வேறு பெரிய நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டு பணியாணைகள் வழங்கப்பட்டன.
இப்போது முதல் கட்டத் தேர்வுகள் முடிந்துள்ளன. இன்னும் எட்டு அல்லது 9 கட்டமாக வளாகத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. அப்போது இன்னும் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று என்ஐடி ஜாம்ஷெட்பூர் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பூஷண் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












