டெல்லி: தமிழகத்திலுள்ள 4 பல்கலைக் கழகங்களில் வெளிநாட்டுப் பேராசிரியர்கள் மூலம் புதிய பாடப் பிரிவுகளை கற்பிக்கும் முறையை விரைவில் கொண்டு வர உள்ளதாக மத்திய பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) துணைத் தலைவர் எச்.தேவராஜ் கூறினார்.
மதுரை விரகனூரிலுள்ள வேலம்மாள் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதற்காக பல்வேறு முயற்சிகளை யுஜிசி மேற்கொண்டு வருகிறது.
மேலும், பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்காக வெளிநாட்டிலிருந்து 1,000 பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பாடம் கற்பிக்கும் "கியான்' எனும் புதிய திட்டம் விரைவில் தமிழகத்தில் சென்னை, மதுரை காமராஜர், பாரதிதாசன், பாரதியார் ஆகிய பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் இது செயல்படுத்தப்படும்.

ஒன்று அல்லது இரு வாரங்கள் பாடம் கற்பிக்கும் அவர்களுக்கு, வாரத்துக்கு 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும்.
ஸ்வாம் எனும் இணையதள கல்வி முறையை ஜூலை மாதம் பிரதமர் தொடங்கிவைக்கிறார். அதன்படி யார் வேண்டுமானாலும் தேவையான பாடத்தை இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். எதிர்காலத்தில் இணையத்தின் மூலம் மட்டுமே கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்தும் வகையில் தற்போது கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












