சென்னை : மீன்வள படிப்பில் சேர விரும்புபவர்களுக்கும் நுழைவுத்தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 10ம் தேதியில் இருந்து மீன்வளத்துறையில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் 2017-2018ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்சி) மற்றும் இளநிலை மீன்வள என்ஜினீயரிங் படிப்பிற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் அடுத்த மாதம் வெளியிட உள்ளது.
இளநிலை மீன்வள என்ஜினீயரிங் (பி.இ. மீன்வள என்ஜீனீயரிங்) மற்றும் இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்சி) ஆகியவை நான்கு ஆண்டுகள் முழு நேர பட்டப்படிப்பாகும். இந்த 2 பட்டப்படிப்பிற்கும் 130 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்
இளநிலை மீன்வள படிப்புக்கு 50 இடங்கள் தூத்துக்குடியில் உள்ள மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும், 60 இடங்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும், 20 இடங்கள் நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள என்ஜினீயரிங் கல்லூரியிலும் உள்ளன.
நுழைவுத் தேர்வு கிடையாது
இந்தப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ரத்னகுமார் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கென வேலைவாய்ப்பு தகவல் மற்றும் ஆலோசனை மையம் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வருகிறது.
வேலை வாய்ப்பு உறுதி
இளநிலை பட்டதாரிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வேலைவாய்ப்புகளை பற்றி அறிந்து கொண்டு பயன் அடைய இந்த மையம் உதவுகிறது. மேலும் இளநிலை பட்டதாரிகளின் விபரங்கள் அடங்கிய அடிப்படை விபரத்தொகுப்பு வேலை தரும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
விண்ணப்பங்கள்
விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட மாட்டாது. விண்ணப்பிக்க தேவையான அனைத்து விபரங்களைப் பற்றியும் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் அறியலாம். (www.tnfu.ac.in)
இணையதளம்
மே மாதம் 10ம் தேதி முதல் பல்கலைக் கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். (www.tnfu.ac.in) ஜூன் மாதம் 10ம் தேதி வரைக்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும். ஜூலை மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.