சென்னை: ராணுவத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து பெண்கள் பணியாற்ற வாய்ப்பு மறுத்ததைத் தொடர்ந்து பெண் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளளார்.
இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்தில் பணியாற்றும் பெண் அதிகாரி மிதாலி மதுமிதா. 39 வயதாகும் மிதாலி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:
2000-ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தேன். திருமணமான சில நாள்களிலேயே ஆப்கானிஸ்தானில் பணிக்கு அனுப்பப்பட்டேன். இதையடுத்து, எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த 15 ஆண்டுகால ராணுவ சேவையில் இருந்து முன்கூட்டியே விலக அனுமதி கேட்டு பாதுகாப்புத் துறைக்கு விண்ணப்பித்தேன்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பணியை முடித்துக் கொண்டு 2013-இல் இந்தியா திரும்பியதும், முன்கூட்டியே ராணுவ சேவையில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொண்டு அதற்கான விண்ணப்பத்தை கடந்த ஆண்டு பாதுகாப்புத் துறையிடம் அளித்தேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் முன்கூட்டியே பணியில் இருந்து விலகும் முடிவை ஒருமுறை மாற்றிக் கொள்ளும் உரிமையை அனைவருக்கும் பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. ஆனால், எனது முடிவை மாற்ற அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை கூறியது.
இதை எதிர்த்து தில்லியில் உள்ள ராணுவத் தீர்ப்பாயத்தில் முறையிட்டேன். அதில் எனக்கு நிரந்த சேவைக்கான அனுமதியை அளிக்கலாம் என்று உத்தரவு வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட பாதுகாப்புத் துறை, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடையை கடந்த 3-ஆம் தேதி பெற்றது.
எனது பணிக்காலம் முடிவடைய வரும் டிசம்பரில் முடிவடைகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை, சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த எனது பணி விலகல் அனுமதி கோரல் விண்ணப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் உடனடியாக பணியில் இருந்து விலகும்படி கடந்த 11-ஆம் தேதி பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், எனது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, என்னை ராணுவப் பணியில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கும்படி பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று மிதாலி மதுமிதா மனுவில் கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தில் "குறுகிய கால சேவை' (எஸ்எஸ்சி) மூலம் சேரும் பெண் அதிகாரிகள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றலாம். அதேபோல அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரையும் பணியாற்ற முடியும். இந்த நடைமுறைக்கு எதிரான வழக்கில் "ஆண் வீரர்களுக்கு நிகராகப் பெண்கள் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதில் எந்தப் பாரபட்சமும் காட்டக் கூடாது. பெண்களுக்கும் ராணுவத்தில் நிரந்தமாக சேவையாற்றும் (54 வயது வரை) வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையிட்டது.
அதில் "ராணுவப் பணியில் நிரந்தரமாக சேவையாற்ற விரும்பும் பெண் அதிகாரிகளுக்கு போர் தளவாடப் பணி நீங்கலாக ராணுவக் கல்விப் பிரிவு, ராணுவ நீதிமன்றப் பணி ஆகியவற்றில் பணி வழங்கப்படும்' என்று கூறியது. இத்தகைய சூழலில் லெப்டினன்ட் கர்னல் மதுமிதாவிற்கு நிரந்தரப் பணி வாய்ப்பை பாதுகாப்புத் துறை நிராகரித்துள்ள நடவடிக்கை, ராணுவப் பெண் அதிகாரிகள் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிதாலி மதுமிதா இவர் 2009-இல் ஆப்கானிஸ்தானில் இந்திய ராணுவப் பணியில் இருந்த போது பயங்கரவாதிகள் காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தாக்குதல் நடத்தனர். அப்போது துணிச்சலுடன் தூதரகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை மதுமிதா காப்பாற்றினார். அவரது வீரத்தைப் போற்றும் வகையில், சேனா பதக்கம் வழங்கி இவரைப் பாதுகாப்புத் துறை கௌரவித்தது.
ஆனால் சாதனை செய்த பெண் அதிகாரியை 15 ஆண்டுகளில் வீட்டுக்கு அனுப்பும் முடிவில் ராணுவம் உள்ளதுதான் வேதனை.


Click it and Unblock the Notifications












