சென்னை: பிஎஸ்சி நர்சிங், பிசியோதெரப்பி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துவிட்டது. முதல் கட்ட கவுன்சிலிங் முடிவில் மொத்தம் 2,104 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த படிப்புகளில் அரசு இடங்கள் அனைத்துமே பூர்த்தியாகிவிட்டன. தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் 2,104 மட்டுமே இன்னும் காலியாக இருக்கின்றன. இதைப் பூர்த்தி 2-ம் கட்ட கவுன்சிலிங் விரைவில் நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
பி.எஸ்.சி. செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம் உள்ளிட்ட 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் சென்னையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கவுன்சிலிங் நேற்று முடிவடைந்துள்ளது. இது முதல் கட்ட கவுன்சிலிங் ஆகும்.
இந்த கவுன்சிலிங்குக்கான ஏற்பாடுகள் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்று வந்தன. தேர்வுக் குழுவினர் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் தொடர்ச்சியாக கவுன்சிலிங்கை நடத்தி மாணவ, மாணவிகளுக்கு இடங்களை ஒதுக்கித் தந்தனர்.
துணை மருத்துவப் படிப்புகளுக்கு அரசுக் கல்லூரிகளில் 555 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 6,621 என மொத்தம் 7,176 இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெற்றது. கவுன்சிலிங் தொடங்கிய ஒரு சில நாள்களிலேயே அரசு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
இதைத் தொடர்ந்து தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெற்றது. இந்த கவுன்சிலிங்கும் நேற்று நிறைவடைந்தது.
முதற்கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் மொத்தம் 5,072 இடங்கள் பூர்த்தியாகி உள்ளன. பி.எஸ்.சி.செவிலியர் 1,827, பி.பார்ம் 61, இயன்முறை மருத்துவம் 194, ஆக்குபேஷனல் தெரபி 22 என மொத்தம் 2,104 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தும் தனியார் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும்.
காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 3-ம் வாரத்தில் நடைபெறும் என தேர்வுக்குழு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.