சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கவுன்சிலிங் ஜூன் 25 நிறைவடையவுள்ளதாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்ட கவுன்சிலிங் கடந்த ஜூன் 19-ஆம் தேதி தொடங்கி கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வருகிறது. சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, இதுவரை மொத்தம் 2,173 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 84 அரசு எம்.பி.பி.எஸ். காலியிடங்களை நிரப்ப கடைசி நாள் கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் இன்று நடைபெறவுள்ளது.
இதேபோல சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அளித்த 597 அரசு இடங்களில் இதுவரை 483 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. மீதமுள்ள 114 இடங்கள் இன்று நிரப்பப்படுகிறது. மேலும் இதுவரை 85 பிடிஎஸ் இடங்கள் கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்பட்டுவிட்டன.
காலியாகவுள்ள 16 அரசு பிடிஎஸ் இடங்கள் இன்று நிரப்பப்படுகின்றன.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் நேற்று கவுன்சிலிங்குக்கு மொத்தம் 1,037 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வில் 961 மாணவர்கள் பங்கேற்றனர்; 76 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 501 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர 139 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 301 பேர் காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டனர்.