சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு மூலம் நடத்தப்பட்டு வந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் கட்ட கவுன்சிலிங் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. கவுன்சிலிங்கில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
இதேபோல 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கிய இந்த கவுன்சிலிங் நேற்று நிறைவடைந்தது.
மேலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் உள்ள 2,257 இடங்களில் தேர்வான மாணவர்களில் 544 பேர் பழைய மாணவர்கள்(அதாவது கடந்த ஆண்டு பிளஸ்2 தேர்வாகி இப்போது எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள்) தேர்வாகியுள்ளதாக தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.நேற்று நடைபெற்ற கடைசி நாள் கலந்தாய்வுக்கு மொத்தம் 367 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் 26 மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வில் 341 மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 214 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தாங்கள் விரும்பிய அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததையடுத்து, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 127 மாணவர்களின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டன. எம்.பி.பி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவில், கடந்த 7 நாள்களில் சேர்த்து மொத்தம் 741 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.