வளர்ந்து வரும் நாடுகளில் தொழிலாளர்களின் நலன் மீது கூடுதல் அக்கரை செலுத்துவது வழக்கம். அதன்படி, தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை எனவும், அதுவும் நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார் பின்லாந்து பிரதமர் சன்னா மரீன்.
பிரதமரின் இந்த புதிய திட்டத்தினை அறிந்த பின்லாந்து மக்கள், அந்நாட்டு ஊழியர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
உலகின் இளம் பிரதமர்
ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராகக் கடந்த டிசம்பர் 6ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார் 34 வயதான சன்னா மரீன். உலகின் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரிய சன்னா மரீன் பின்லாந்தின் 3-வது பெண் பிரதமர் ஆவார். இவர் பதவி ஏற்றதிலிருந்தே அந்நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
நான்கு நாட்கள் தான் வேலை
பின்லாந்து நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி வரும் பிரதமர், தற்போது தொழிலாளர்களின் நலன் கருதி பின்லாந்தில் தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும். மீதம் உள்ள 3 நாட்கள் விடுமுறை, ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
தொழிலாளர்களின் குடும்பங்கள்
தொழிலாளர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். இந்த திட்டமானது ஏற்றுக் கொள்ளப்பட்டால் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியும். நெகிழ்வான வேலை, சரியான நேரம் உள்ளிட்டவை வாழ்வில் அடுத்தகட்டமாக இருக்கும் என சன்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் தரப்பு கூறுயது பின் வருமாறு.
அதிக கவனம் செலுத்துவார்கள்
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மக்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவார்கள். பிடித்தவர்களுடன் நேரத்தை பொழுதுபோக்குவது, ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குவது, பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்றவை மிகவும் அவசியமானது. தொழிலாளர்கள் தங்கள் விடுமுறைக் காலத்தையும், வேலை நாளில் மிச்சமாகும் நேரத்தையும் தங்கள் குடும்பத்தினருடன் செலவிடுவதால் வேலை நாட்களின் போது வேலையில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
இதுதான் எங்கள் வாழ்க்கை
தற்போது உள்ள உற்பத்தியை விட இந்த திட்டம் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று சன்னா மரீன் கூறியுள்ளார். இதுதான் இனி எங்களின் வாழ்க்கையில் நாங்கள் மேற்கொள்ள இருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்று கூறியிருக்கிறார். பின்லாந்து மக்கள், அந்நாட்டு ஊழியர்கள் அனைவரும் பிரதமரின் இந்த திட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.
வேலை நேர ஒப்பந்தம்
பின்லாந்து நாட்டில் ஏற்கனவே 1996-ன் வேலை நேர ஒப்பந்தம் அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை 3 மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது 3 மணி நேரம் கழித்தோ தொடங்கி குறிப்பிட்ட மணி நேரங்களில் வேலை செய்து கொள்ள அனுமதிக்கிறது.
நடைமுறைக்கு வருமா?
பின்லாந்து நாட்டில் தற்போது ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலையும், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நேரம் உள்ளதாக தெரிகிறது. கடந்த 2015ம் ஆண்டில் ஸ்வீடன் முன்னோக்கிச் சென்று ஆறு மணி நேரம் வேலை நாளை ஏற்றுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, அதிக உற்பத்தி திறன் கொண்ட மகிழ்ச்சியான ஊழியர்களை அந்த திட்டம் ஏற்படுத்தியது. எனவே, தற்போது சன்னா மரீனின் இந்த திட்டம் நடைமுறைக்கு வர வேண்டும் என அந்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சுவீடன், ஜப்பானிலும் இதே திட்டம்
பின்லாந்தின் அண்டை நாடான சுவீடனில் 6 மணி நேர வேலை நாட்களை செயல்படுத்துவதன் மூலம் ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், அதிக உற்பத்தி திறன் கொண்டவர்களாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தொழிலாளர் குறைந்த பணி நேரம் என்பது உலகின் பல நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டமாகும். ஜப்பானில் இதன் மூலம் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதும், அதன் மூலம் உற்பத்தி அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.