தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்றாம் பருவத் தேர்வுகளை வரும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் பிற வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகளை, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணையை மாவட்ட அளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.
மேலும், வேலை நாட்களின் இழப்பினை சனிக் கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் நடப்பு கல்வியாண்டில் ஏப்ரல் 12-ஆம் தேதி கடைசி வேலை நாளாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.