கொரோனா ஊரடங்கின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நிலுவையில் உள்ள அனைத்து பல்கலைக் கழக தேர்வுகளும் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு நடைபெறும் என உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பல்கலைக் கழகத்தில் நிலுவையில் உள்ள தேர்வுகள் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் பிறகு நடைபெறும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
உயர் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பலவகை தொழில்நுட்ப மாணவர்களுக்குக் கல்லூரி இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும். இத்தேர்வுகளில் மாணவர்கள் நேரில் பங்கேற்க வேண்டும்.
இதற்கான விரிவான அட்டவணை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
பி. ஆர்க் இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லை விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்கப்படும். இதில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.