டிஎன்பிஎஸ்சி சார்பில் அடுத்த பணி வாய்ப்பிற்கான அறிவிப்பு விப்பதற்கு முன்பு ஏற்கனவே வெளியான அறிவிப்பு குறித்த விபரங்களை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சாவூரை சேர்ந்த பரமானந்தம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "உதவியாளர், எழுத்தர் பணி தேர்வுக்கு 2014 பிப்ரவரி 6-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. 2014 ஜூன் 29-ம் தேதியன்று இதற்கான எழுத்துத் தேர்வும் நடைபெற்றது. தேர்வானோரின் தற்காலிக பட்டியல் வெளியானதில், எனது பெயர் இருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற நிலையில், காலிப்பணியிடம் இருந்தால் அழைப்பு விடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. ஆனால், இதுவரை பதில் இல்லை.
எனவே, காலி இடத்தில், எனக்கும் தகுந்த பணியிடம் வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், காலிப்பணியிடம் இருந்தால், மனுதாரரை நியமிக்க பரிசீலிக்க வேண்டும். அடுத்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் முன், ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை, காலிப் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். இதை சரியாக பின்பற்றாதது தெரியவந்தால், அதை உயர்நீதிமன்றம் கடுமையாக எடுத்துக் கொள்ளும் என எச்சரிக்கை விடுத்தார்.


Click it and Unblock the Notifications












