சென்னை: சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 533 தனியார் பள்ளிகளுக்கு புதிதாக கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது.
கட்டணம் தொடர்பான புதிய அறிவிப்பு தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2015-16 முதல் 2017-18 கல்வியாண்டு வரை இந்தப் பள்ளிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் வரை இந்தப் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் கூறியதாவது:
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட பல்வேறு பள்ளிகள் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருந்தன. நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்தப் பள்ளிகளுக்கு இப்போது புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல பள்ளிகளுக்கு 2014-15-ஆம் கல்வியாண்டோடு பழைய கட்டண நிர்ணயம் முடிவுக்கு வந்தது. சில பள்ளிகள் புதிதாகவும் கட்டண நிர்ணயத்துக்கு வந்தன. இதைத் தொடர்ந்து மொத்தமாக 533 பள்ளிகளுக்கு இப்போது கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.38,800 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.43,300 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே தமிழகத்தில் அதிக கட்டணமாகும். அதேபோல, இந்தப் பள்ளிக்கு 2017-18-ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.46,948 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.52,393 ஆகவும் கட்டணம் இருக்கும்.