டெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வினை கடந்த 2011 ஆம் ஆண்டு எழுதியவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் இருந்து தேர்வு நடைமுறை மாற்றப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விண்ணப்பித்தவர்களில் ஏறத்தாழ பாதிப்பேர் தேர்வு எழுத வரவில்லை. இதையடுத்து, அந்த தேர்வு எழுதியவர்களுக்கு இந்த ஆண்டு கூடுதலாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, 2011 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதியவர்கள், இந்த ஆண்டு தேர்வை எழுதலாம் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உயர் அதிகாரி நேற்று தெரிவித்தார்.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளை குறிப்பிட்ட தடவை மட்டுமே எழுத உச்சவரம்பு உள்ளது. அதைத் தாண்டி 2011 ஆம் ஆண்டு விண்ணப்பதாரர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.