சென்னை: பிளஸ் 2 விடைத்தாள்களை இணைய தளத்தில் வெளியிட தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு கடந்த 31ம் தேதியுடன் முடிந்தன. விடைத்தாள் திருத்தும் பணி தற்போது நடந்துவருகிறது. இன்னும் சில நாட்களில் மொழிப் பாடத் தேர்வின் விடைத் தாள்கள் திருத்தும் பணி முடிவடைய உள்ளது. இந்நிலையில், குழப்பமான கேள்விகள் இடம் பெற்ற தேர்வுகளில் எந்த கேள்விகளுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்று தேர்வுத் துறை முடிவு செய்யும்.
இதையடுத்து, 6ம் தேதி முதல் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் பாடத் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்த தொடங்குவார்கள்.
ஏப்ரல் 31ம் தேதி இந்த பணி முடியும். பின்னர் அனைத்து மாணவர்களின் மதிப்பெண்கள் டேட்டா சென்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு தேர்வு முடிவுக்கான பட்டியல் தயார் செய்வார்கள். மே 20ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
தேர்வு முடிவுக்கு பின்னர் மதிப்பெண்களில் சந்தேகம் இருப்பவர்கள் மறு கூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விடைத் தாள்கள் தேர்வுத்துறையின் இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு எண்ணை பதிவு செய்து விடைத்தாளில் உள்ள குறைககளை கண்டுபிடிக்கலாம். அதற்கு பிறகு தேவைப்பட்டால் மறு மதிப்பீடு செய்யப்படும்.