கல்லூரி மாணவிகளிடையே வணிகம் குறித்தான திறனை மேம்படுத்தும் வகையில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் மாணவிகளால் மாதிரி கடைகள் நடத்தப்பட்டது. இதில், உணவுப் பொருட்கள் கடைகளில் மட்டும் மாணவிகள் குவிந்தது ருசிகர சம்பவமாக அமைந்துள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவிகளால் திறன் மேம்பாட்டு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சந்தைகளில் உள்ளதைப் போலவே சிறுசிறு கடைகள் அமைக்கப்பட்டது.
சுமார், 150 கடைகள் அமைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியில் வணிகவியல் துறை மாணவிகள் தான் கடைகளின் உரிமையாளர்களாகச் செயல்பட்டனர். அங்கே, துணிவகைகள், இயற்கை சோப்புகள், அழகு சாதன பொருட்கள், கைவினை பொருட்கள், அணிகலன்கள் என ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உண்மை சந்தைப் போலவே கல்லூரி வளாகம் காட்சியளித்தது. ஆனால், இந்தவகை பொருட்களை வாங்குவதற்கு பெரும்பாலான மாணவிகள் ஆர்வம் காட்டவில்லை.
அதே சமயத்தில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த உணவு கடைகள் அமைத்திருந்த மாணவிகளுக்கு மிகுந்த வருமானம் கிடைத்தது. வழக்கம் போல மாணவிகள் தங்கள் தோழிகளோடு கும்பலாக உணவு கடைகளுக்குள் புகுந்து விதவிதமான நொறுக்குதீனிகள், சாக்லேட் மற்றும் உணவுப் பொருட்களை ருசி பார்த்ததால் உணவு கடைகள் அமைத்த மாணவிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.