சென்னை, மார்ச் 23: இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகளில் தொழிலாளர் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த பட்டியலை மறைக்காமல் வெளிப்படையாக அதை அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 11 இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அந்த கல்லூரிகளில் 900 எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் ஒதுக்கப்பட்ட 100 இடங்களில் ஆண்டுதோறும் சேர்க்கை நடக்கிறது.
இந்நிலையில், நிதிச் சுமையை காரணம் காட்டி இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடரப் போவதில்லை என்று கடந்த டிசம்பர் மாதம் இஎஸ்ஐ நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இந்த கல்வி ஆண்டிலும் மேற்கண்ட இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கையை நடத்த இஎஸ்ஐ நிறுவனம் முடிவு செய்து அதற்கான குறிப்பாணையை அனுப்பியுள்ளது. ஆனால் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை மட்டும் வெளியிடவில்லை.
சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன. அவற்றில் 65 இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்புவார்கள். மீதம் உள்ள 35 இடங்களில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்புவார்கள். பாக்கியுள்ள 20 இடங்கள் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், மேற்கண்ட இடங்கள் நிரப்பும் போது 65 சதவீத இடங்கள், 15 சதவீத அகில இந்திய இடங்கள் ஆகியவற்றில் சேர்க்கப்படும் மாணவர்கள் பற்றிய விவரங்களை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி வெளியிடுகிறது.
ஆனால் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும் 20 சதவீத இடங்கள் குறித்த பட்டியலை வெளியிடுவதில்லை. இந்த பட்டிய¬லை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கேட்கின்றனர். இந்த 20 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்துக்கோ, தமிழ்நாடு மருத்துவ கல்வி தேர்வுக் குழுவுக்கோ கொடுப்பதில்லை. இதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கேட்டு வருகின்றனர். இந்த ஆண்டிலாவது அந்த பட்டியல் வெளியாகுமா?