சென்னை: தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான மாணவர்கள் தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பி.இ படிப்புகளுக்கு 1,53,238 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,50,910 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களின் கட்-ஆப் வாரியான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதனை அண்ணா பல்கலைக் கழகத்தின் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா வெளியிட்டார்.
இத்தரவரிசைப் பட்டியலில், 23 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆப் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் கோவை சூலூரைச் சேர்ந்த கீர்த்தி பாலன் என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். தருமபுரி நிஷாந்த் ராஜன் 2ம் இடமும், திருச்சி முகேஷ் கண்ணன் 3ம் இடமும் பெற்றுள்ளனர்.
ஏனைய இடங்களான 4,5,6,7ம் இடங்களை முறையே நாமக்கல் நிவாஷ், சென்னை சரவணக்குமார், அவினாசி கிரிதரன், விழுப்புரம் பிரவீன் குமார் ஆகியோர் பெற்றுள்ளனர்.
பொறியியல் படிப்பிற்கான பொதுக் கலந்தாய்வு வருகின்ற ஜூலை 1 முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.