பி.இ. ஆன்லைன் கலந்தாய்வுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் புதன்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.

இதனால், மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள பி.இ. இடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐடி டூ கலைத் துறை
மென்பொருள் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கை, ஊதிய உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் குறையத் தொடங்கியது. அதேவேலையில் கலை மற்றும் அறிவியல் துறைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித் தொடங்கியது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
இதனிடையே, கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கின. இதன் காரணமாகத் தொழில்நுட்ப பணியாளர்களின் தேர்வையும் அதிகரித் துவங்கியது. இதனைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு முதல் பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த ஆண்டும் 1.33 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்தனர்.
அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடங்கள்
2019-20 ஆம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்குச் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தங்களுடைய நிர்வாக ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் 30 ஆயிரம் இடங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற்றுள்ளன.
14 ஆயிரம் பேர் புறக்கணிப்பு
இருப்பினும், 1.33 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால் கலந்தாய்வு தொடங்கும்போதே 39,148 இடங்கள் காலியாக விடப்படும் நிலை ஏற்பட்டது. அதிலும், இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களில் அசல் சான்றிதழ் சரிபார்ப்பை 14 ஆயிரத்து 371 மாணவ, மாணவிகள் தவிர்த்துள்ளனர்.
73,101 மாணவர்களுக்கு அழைப்பு
விண்ணப்பித்த 1.33 லட்சம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 7-ஆம் தேதி தொடங்கி வரும் புதன்கிழமையுடன் (ஜூன் 12) முடிவடைய உள்ளது. இதில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வரை 73 ஆயிரத்து 101 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவர்களில் 58,730 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். 14 ஆயிரத்து 371 பேர் வரவில்லை.
15 ஆயிரத்தைத் தாண்டும் சார்..!
சான்றிதழ் சரிபார்ப்பு இன்னும் இரு தினங்கள் நடைபெறும் என்பதால், இதில் பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்ட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கும் காலியிடங்கள்
இதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பி.இ. படிப்புகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறையும். மேலும், சேர்க்கையின்றி காலியாகும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications












