சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் புது டெக்னிக்கை கையில் எடுத்துள்ளன. தங்களது கல்லூரியில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக (ஓசியில் இல்லை, லம்ப்பாக பெரிய தொகையை வாங்கிக் கொண்டுதான்) டெலி காலர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
அப்போதுதான் எழுந்து பல் விளக்கி, காபி டீ குடித்து விட்டு டாய்லெட்டுக்குப் போயிருப்போம்.. போன் வரும்.. ஓடிப் போய் எடுத்தால் நாங்க பீப்பீபிடும்டும் வங்கியிலிருந்து பேசுறோம். உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா என்று கேட்பார்கள். பிரணாப் முகர்ஜியே கூட இதுபோன்ற தொலைபேசி அழைப்பால் கொலைவெறியாகி கத்திய சம்பவத்தையும் நாடு கண்டது.
இதுபோல பேசுபவர்கள்தான் டெலிகாலர்கள். இப்போது இவர்களின் உதவியை தனியார் பொறியியல் கல்லூரிகளும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. மாணவர்களை தங்களது கல்லூரிக்குள் இழுத்துப் போட வசீகரமாக பேசி வலை விரிக்க ஆரம்பித்துள்ளனர் தமிழகத்தில்.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகியுள்ள செய்தியில், தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆயிரக்கணக்கான இடங்கள் வருடா வருடம் காலியாகவே கிடக்கிறது. இந்த காலி சீட்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது.
மாணவர்கள் பல கல்லூரிகளில் சேரவே முன்வருவதில்லை. இதனால்தான் இத்தனை சீட்கள் காலியாக கிடக்கின்றன. இதனால் இந்த இடங்களை நிரப்புவதற்கும், தங்களது கல்லூரிகளுக்கு மாணவர்களைப் பிடிக்கவும் டெலிகாலர் சேவையை பல கல்லூரிகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.
பிளஸ்டூ மாணவர்களின் விவரத்தை கையில் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு டெலிகாலர்கள் மூலம் வலை விரிக்கிறார்கள். தொடர்ந்து அவர்களிடம் பேசி தங்களது கல்லூரி குறித்து பில்டப்பாக பேசி மடக்க முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சியில் எத்தனை மாணவர்கள் மடங்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இது இப்போது புதிய டிரெண்டாக மாறியுள்ளது கல்வித்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் குறித்த விவரம் வேண்டுமா.. இங்க வாங்க...