பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் உடனான இணைப்பு அந்தஸ்தை புதுப்பித்துக்கொள்ள விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அண்ணா பல்கலைக் கழகம் நீட்டித்துள்ளது.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள் ஆண்டிற்கு ஒருமுறை அந்தந்த பல்கலைக் கழகங்களின் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலுக்கு (ஏஐசிடிஇ) விண்ணப்பித்து, மாணவா் சேர்க்கைக்கான அனுமதியைப் பெற வேண்டும்.
அதோடு, பொறியியல் கல்லூரிகளுக்கான இணைப்பு அந்தஸ்தையும் அந்தந்த பல்கலைக் கழகங்கள் புதுப்பித்துத் தருவது வழக்கம். இந்த நடைமுறையின் பிறகே பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.
அதன்படி, தற்போது 2020-21- ஆம் ஆண்டிற்கான அனுமதியைப் பெற ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க பிப்ரவரி 29-ஆம் தேதி கடைசித் தேதி என ஏஐசிடிஇ ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும், இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறுபவர்கள் அபராதத் தொகையுடன் மார்ச் 5 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, பொறியியல் கல்லூரிகள் இதற்கான விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக் கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பிப்ரவரி 10-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்த அண்ணா பல்கலைக்கழகம், அன்று மாலையோடு விண்ணப்ப நடைமுறைகளையும் நிறைவு செய்தது.
இந்நிலையில், ஏஐசிடிஇ 2020-21 அனுமதி வழிகாட்டி கையேட்டில் குறிப்பிட்டுள்ள புதிய நடைமுறைகளைப் பூர்த்தி செய்யக் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகத்திடம் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பல்கலைக் கழக இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம் பிப்ரவரி 17ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தாமதக் கட்டணம் ரூ. 25,000 செலுத்தி பிப்ரவரி 21 வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக பல்கலைக்கழக ஆய்வுக் குழு விரைவில் பொறியியல் கல்லூரிகளில் ஆய்வை மேற்கொள்ளும். எனவே, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.