சென்னை : 2017-2018ம் கல்வி ஆண்டிற்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 1 முதல் ஆரம்பமாகும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. பி.டெக் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்வதற்கு எந்தவித நுழைவுத் தேர்வும் கிடையாது. 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு 30ம் தேதி வெளியிடப்படும்.
மே 1 முதல் மாணவர் மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மே 12ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.
விணணப்பப் படிவம்
அதன் பிறகு மாணவ மாணவிகள் எடுத்த மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு மே 31ம் தேதி கடைசி நாள் ஆகும். ஆனால் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தினை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க ஜூன் 3ம் தேதி கடைசி நாளாகும்.
ஆன்லைன்
கடந்த ஆண்டு நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ. 500க்கு டி.டி. எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் மூலமே பணம் செலுத்த வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் சேர்த்து (நகல்கள்) அணணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.
கலந்தாய்வு
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதியும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 27ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியப் பாடத்திட்டம்
என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த பாடத்திட்டத்தில் புதிய தொழில்நுட்பமும், வேலை வாய்ப்பும் சேர்க்கப்பட்டு உள்ளது. வருகிற கல்வி ஆண்டில் அந்த புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாப் பல்கலைக்கழகம் (ஐஐடி நீங்கலாக) தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர்,
தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன்,
அண்ணா பல்கலைக்கழகம்,
கிண்டி, சென்னை - 600025.