சென்னை: உள்நாட்டில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறமையாளர்களை கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபாகில் நடைபெற்ற 7-வது வினோபா பாவே பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பிரணாப் பேசியதாவது:
ஜார்க்கண்ட் மாநிலம் இயற்கை வளங்கள் கொண்ட மாநிலம். இங்கு ஏராளமான என்ஜினீயரிங், ஸ்டீல் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் இங்குள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வரும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
கல்லூரிகளில் திறமையாளர்களாகத் திகழும் கண்டுபிடிப்பாளர்களை அக்கல்லூரி நிர்வாகங்கள் பாராட்டி ஊக்குவிக்கவேண்டும்.
இதன்மூலம் ஏராளமான விஞ்ஞானிகள் உருவாவார்கள். வருங்காலத்தில் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான திறமையாளர்கள் கிடைப்பார்கள்.
நாட்டில் உற்பத்தியாகும் இரும்பில் 28 சதவீதம் ஜார்க்கண்டிலிருந்துதான் கிடைக்கிறது.
ஜார்க்கண்டில் தொழில்துறைக்கு ஊக்கம் அளிப்பதன் வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியின்போது முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு டி.லிட். பட்டத்தை பிரணாப் வழங்கினார்.