சென்னை: தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு Enriching English training என்ற தலைப்பில் பயிற்சி தர தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்க கல்வித்துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடக்க கல்வித்துறையில் ஆங்கிலக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட, பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட 43 வகையான பாட சம்பந்தமான சிடிக்களை பயன்படுத்தி தொடக்க நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கற்றல் திறனை வலுப்படுத்துவதற்கு 2014&2015ம் கல்வி ஆண்டில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு Enriching English training என்ற தலைப்பில் தொடக்க கல்வி இயக்ககமும், அனைவருக்கும் கல்வி இயக்ககமும் இணைந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளன.
இந்த பயிற்சியை மாநில அளவில் 3 கட்டங்களாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 23, 24ம் தேதி சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கும், 25, 26ம் தேதிகளில் நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய மாவட்ட ஆசிரியர்களுக்கும், மார்ச் 5, 6ம் தேதிகளில் திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்ட ஆசிரியர்களுக்கும் மேற்கண்ட பயிற்சி நடக்கும்.
மாநில அளவிலான இந்த பயிற்சி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அரங்கில் நடக்கிறது.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தபால் அனுப்பியுள்ளதால் அந்த ஆசிரியர்களை உடனடியாக பணியில் இருந்துவிடுவித்து மேற்கண்ட பயிற்சியில் கலந்து கொள்ள தொடக்க கல்வி அலுவலர்கள் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.