டெல்லி: பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிவதற்காக எலக்ட்ரானிக் அடையாள அட்டைகளை அறிமுகம் செய்ய டெல்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த எலக்ட்ரானிக் அடையாள அட்டையில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டிருக்கும்.
இதுகுறித்து டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது:
டெல்லியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், 15 லட்சம் பேர் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், மாணவ-மாணவியர், பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கவும் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட அடையாள அட்டைகளை மாணவர்களுக்கு வழங்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்களுடன் எலக்ட்ரானிக் அடையாள அட்டைகள் இணைக்கப்படுவதால் மாணவர்களின் நடமாட்டத்தையும், அவர்கள் பள்ளிக்கு வராத விஷயங்களை கண்காணிக்கவும் முடியும்.
விரைவில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.