சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்கான நடைபெறும் தேர்வுக்கான மறுதேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், இந்தத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் அவற்றுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர், வேதியல் பரிசோதகர், களப்பணி உதவியாளர் (பயிற்சி) சுருக்கெழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர் (நிர்வாகம்), தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல், இயந்திரவியல்) ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் தேர்வு நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட 6 பதவிகளுக்கு 31 மையங்களில் நடைபெறுவாக இருந்த தேர்வு 8 மையங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மையங்கள் குறித்த விவரங்கள், தேர்வுக்கான கால அட்டவணை ஆகியவற்றை www.tangedco.gov.in, tangedco.directrecruitment.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இத்தகவல் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.