ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித் துறைக்கு என புது திட்டங்களை அறிவித்தார்.
ஈரோட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிறப்பு நோக்குக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் பங்கேற்று உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், கல்வித் துறைக்கு என ஸ்டூடியோ ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், தொலைக் காட்சி சேனல் ஒன்றினை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமூக நலத்துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து அங்கன்வாடியில் இருக்கும் 51,000 மாணவர்களுக்கும், பிற மாணவர்கள் என ஒரு லட்சம் மாணவர்களுக்கு எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்பறைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை வரும் 21-ஆம் தேதியன்று முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல் அதற்கான பாடத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.