சென்னை: பீடி, சுரங்கம், திரைத்துறை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையைப் பெற விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் நலிந்த பிரிவினருக்காக பல்வேறு உதவித்தொகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. அதன்படி பீடி, சுரங்கம், திரைத்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக இந்த உதவித்தொகையைப் பெறலாம்.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பயில்வோர் இந்த உதவித் தொகையைப் பெற விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் http:tirunelveli.nic.inpdfcgscholar.pdf என்ற இணையதள லிங்க்-கில் வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான மாணவ, மாணவிகள் இணையத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றுகளை இணைத்துத் தொடர்புடைய கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள், 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி வரையிலான மாணவ, மாணவிகளின் விவரம் குறித்த ஒருங்கிணைந்த பட்டியலை இணைத்து செப். 15-ம் தேதிக்குள் கிடைக்குமாறு, நல ஆணையாளர், தொழிலாளர் நல அமைப்பு, 8/2-ஏ செயின்ட் தாமஸ் சாலை, ஹைகிரவுண்ட், திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தொழிலாளர் நல அமைப்பின் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.