சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவ கல்லூரிகள் குறித்து ஆய்வு நடத்த கட்டண நிர்ணய குழு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூல் வேட்டை நடக்கிறது. சில கல்லூரிகளில் ஒரு கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது டொனேஷன். இது தவிர லட்சக்கணக்கில் கட்டணம் வேறு. இதுகுறித்து ஏராளமான புகார்கள் மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வருகின்றன.

மேலும் தனி நபர் ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த பொது நல மனு ஒன்றில் சுயநிதிக் கல்லூரிகள் கட்டணய நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக சுயநிதி மருத்துவ கல்லூரி ஒன்று வசூலிப்பதாக தெரிவித்து இருந்தார்.
அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதி மன்றம் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணம் குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தர வேண்டும் என்று சுயநிதி கட்டண நிர்ணய குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன் பேரில் கட்டண நிர்ணயக் குழு அனைத்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. மே மாதம் தொடங்கும் இந்த ஆய்வுகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் ஜூலையில் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications












