சென்னை: பல்வேறு பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அளித்து அவர்களை முன்னேற்றி வருகிறது பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி).
இப்போது சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் எம்.ஃபில், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்காக கல்வி உதவித்தொகையை அறிவித்துள்ளது.
மேற்கட்ட பிரிவு மாணவர்கள், இந்த உதவித்தொகையைப் பெற விரும்பினால் அவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக் குழு அனுப்புதல் நலம்.
* மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சிறுபான்மையின மாணவர்கள் எம்.ஃபில், பிஎச்.டி. படிப்புகளை மேற்கொள்ள யுஜிசி கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பவர்கள் முதுநிலை பட்டப் படிப்பில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் தகுதி பெறுபவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25 ஆயிரம் வீதமும், மீதமுள்ள ஆண்டுகளுக்கு ரூ. 28,000 வீதமும் உதவித்தொகை வழங்கப்படும்.
* ராஜீவ் காந்தி தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளை மேற்கொள்ள கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் தகுதி பெறுபவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 16 ஆயிரம் வீதமும், மீதமுள்ள ஆண்டுகளுக்கு ரூ. 18,000 வீதமும் உதவித்தொகை வழங்கப்படும்.
* இந்திரா காந்தி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாக இருப்பவர்களுக்கு முதுநிலை பட்டப் படிப்பு மேற்கொள்ள மாதம் ரூ. 3,100 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
* இளநிலை பட்டப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு முதுநிலை பட்டப் படிப்பு மேற்கொள்ள மாதம் ரூ. 3,100 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்புகளும் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கல்வி உதவித்தொகைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதியாகும். இதற்கு இணையவழியில் (ஆன்லைன்) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே உதவித்தொகைப் பெற விரும்புவோர் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்புதல் நலம்.
கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.ugc.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.