சென்னை: ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்து வருகின்றனர்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(ஐஐடி) உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. திறமையான மாணவர்கள் மட்டுமே இந்த ஐஐடி-க்களில் சேர முடியும்.

ஆனால் இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் நடத்தும் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வியடைந்து வருவது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014-15-ம் கல்வியாண்டில் 63 மாணவர்கள் ஐஐடி தேர்வில் தோல்வியடைந்துள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 6 ஐஐடி-க்களில் 63 மாணவர்கள் ஐஐடி இளநிலை படிப்புகளில் தோல்வியடைந்துள்ளனர். பொதுப் பிரிவில் 8 பேரும், ஓபிசி பிரிவில் 9 பேரும், எஸ்சி பிரிவில் 30 பேரும், எஸ்டி பிரிவில் 16 பேரும் இந்தத் தேர்வில் தோல்வியடைந்தனர்.
மேலும் 2014-15-ம் கல்வியாண்டில் ஐஐடி-க்களில் இருந்து 757 பேர் இடையிலேயே நின்றுவிட்டனர். 2013-14-ம் ஆண்டில் மாணவர்கள் இடைநிற்றல் ஐஐடி-க்களில் 697- ஆக இருந்தது. இது கடந்த ஆண்டில் மேலும் அதிகரித்துள்ளது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












