சென்னை: உயர்கல்வித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை அனுமதிக்கக்கூடாது என்று கல்வியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக கல்வியாளர்களும், சமூக நல ஆர்வலர்களும் தமிழக ஆளுநர் கே. ரோசய்யாவிடம் மனு கொடுத்துள்ளனர்.
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் ஒப்புதல் கொடுத்தால் நமது நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படும். ஏழை மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் ச. செந்தில்நாதன், டாக்டர் ரெக்ஸ் சற்குணம், கல்வியாளர் ஐ.பி. கனகசுந்தரம், தமிழ்நாடு மாணவர் பெற்றொர் நலச்சங்கத் தலைவர் செ.அருமைநாதன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்து மனுவை வழங்கியுள்ளனர்.
இந்த மனுவை உரிய நடவடிக்கைக்காக, மத்திய அரசுக்கு அனுப்புவதாக ரோசய்யா தங்களிடம் உறுதியளித்ததாக பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
ஆளுநர் வாயிலாக பிரதமருக்கு வழங்கப்பட்ட மனுவின் விவரம்:
உலக வர்த்தக அமைப்பின் சார்பில் சேவைக்கான பொது ஒப்பந்தத்தின்படி, உயர் கல்வியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க இந்தியா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஒப்புதலானது, கென்யாவின் தலைநகரான நைரோபியில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக வர்த்தக அமைப்பின் 10-ஆவது மாநாட்டில் ஒப்பந்தமாக நிறைவேற உள்ளது.
அதன்படி, உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 160 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்தியாவில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தொடங்கலாம்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியாவில் பணம் இருந்தால் மட்டுமே உயர் கல்வி பெற முடியும் என்ற நிலை உருவாகும். கல்வி உதவித் தொகை, மானியம், இடஒதுக்கீடு போன்ற அனைத்தும் இல்லாமல் போகும். ஏழைகள் கல்வி கற்க முடியாது.
கல்வியை வணிகப் பொருளாக்கும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை பொதுமக்களுக்கு வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்கவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களை உயர் கல்வியில் அனுமதிப்பதற்கான ஒப்புதலில், அந்த ஒப்புதலைத் திரும்பப் பெறவும் வழி உள்ளது.
ஆனால், இவை ஒப்பந்தங்களாக நிறைவேறினால், அதன்பிறகு, அவற்றைத் திரும்பப் பெற முடியாது. எனவே, உயர் கல்வியை உலக நிறுவனங்களுக்கு திறந்துவிட இந்தியா வழங்கியுள்ள ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.