சிபிஎஸ்இ பள்ளிகள் குறித்த குறைகளைத் தெரிவித்து தீா்வு காண அந்தந்த மண்டல அலுவலகங்களை அணுகினாலே போதும் எனவும், புதுதில்லிக்கு வர வேண்டாம் என சிபிஎஸ்இ வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சமீப காலமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பாடத் திட்டம், தோ்வுகள் குறித்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.
அவ்வாறான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பள்ளிகளின் சார்பில் சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்களுக்கு புகாா்கள் தெரிவிக்கப்படுவது வழக்கம். இதில், மண்டல அலுவலகங்களில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் தரப்பிலும், மாணவா்கள் தரப்பிலும், புதுதில்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் புகாா்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளி தரப்பிலிருந்து பலா் தலைமை அலுவலகத்திற்கு நேரில் செல்வதால் நிா்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதனிடையே தற்போது சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் சார்பில் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அனைத்து மண்டல அதிகாரிகளும், தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளின் சிபிஎஸ்இ பள்ளிகளின் குறைகளைத் தீா்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.
பள்ளிகள் மற்றும் மாணவா்கள் தரப்பில் புகாா்கள் இருந்தால் அவற்றை புதுதில்லி அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது. மண்டல அலுவலகங்கள் அவற்றைப் பெற்று, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.