சென்னை: தொலைநிலைக் கல்வித் திட்டம் மூலம் படித்து பட்டம் வாங்கியவர்களும் இனி மத்திய அரசு வேலையில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதாவது பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்துள்ள பல்கலைக்கழகங்களில் தொலைநிலைக் கல்வி மூலம் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் இனி மத்திய அரசு வேலையிலும் சேர முடியும் என்பதே அது.
மேலும் தொலைநிலைக் கல்வியை வழங்கி வரும் பல்கலைக்கழகங்களுக்கு சில விதிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற கல்வியை வழங்கி வரும் பல்கலைக்கழகங்கள் இனி தொலைநிலை கல்வி கவுன்சிலின் அனுமதியையும் பெறவேண்டும் என்பதே அது.
இந்த தொலைநிலைக் கல்வி கவுன்சில் என்பது இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின்(IGNOU) இயங்கி வந்தது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அது இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தொலைநிலைக் கல்வி கவுன்சிலானது சுதந்திரமான அமைப்பாகவும், அதே நேரத்தில் மத்திய மனித வள அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.