தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகள் சில தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதால் தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா நோய் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, 1 முதல் 9ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டு தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சில தனியார் பள்ளிகள் ஊரடங்கு முடிந்து திறந்தவுடன் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி தேர்ச்சியா, இல்லையா என அறிவித்துள்ளதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி இயக்குநர் கருப்பசாமி தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் தேர்வு நடத்துவதாக அறிவிப்பது கடும் நடவடிக்கைக்கு உள்ளாகும் செயல். இந்த வகுப்புகளுக்கு தேர்வுகளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.