சென்னை: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்கள்தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் சர்க்கரை நோயால் ஒருவரது பணித்திறன் பாதிக்கும் என்று எந்தவித அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இல்லாதபோது, மனுதாரரின் வாதத்தை ஏற்க இயலாது என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு, ரயில்வே நிர்வாகம் 8 வாரங்களுக்குள் பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் டி பணியிடங்களை நிரப்ப ரயில்வே நிர்வாகம் விளம்பரம் வெளியிட்டது. இதுதொடர்பாக தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதன் பின்னர், அந்தப் பணியிடங்களுக்கு இறுதியாக சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனைகளுக்காக 4,232 பேர் தேர்வாயினர். அதில், 58 பேர் மருத்துவப் பரிசோதனையில் தேர்ச்சி பெறாமல் போய்விட்டனர்.
அதில் புஷ்பம் என்ற பெண்ணும் தேர்வாகவில்லை. ஆனால் இந்த விவகாரத்தை புஷ்படம் விடவில்லை.
பின்னர், அந்தப் பணியிடத்துக்குத் தான் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் புஷ்பம் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், புஷ்பத்துக்கு 12 வாரங்களுக்குள் பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
ஆனால் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ரயில்வே நிர்வாகம் புஷ்பத்துக்கு பணி நியமன ஆணையை வழங்கவில்லை.
மாறாக மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, ரயில்வே நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பல வாய்தாக்களாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், டி.மதிவாணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்கள், விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ரயில்வே நிர்வாகம், எதிர்மனுதாரருக்கு சர்க்கரை நோய் இருப்பதாகக் கூறி பணி நியமன ஆணை வழங்க மறுத்துள்ளது. இது சரியான வாதமாக இருக்க முடியாது சர்க்கரை நோயால் ஒருவரது பணித்திறன் பாதிக்கும் என்று எந்தவித அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இல்லை. அப்படி இல்லாத நிலையில், மனுதாரரின் வாதத்தை ஏற்க இயலாது.
இந்திய சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் சுமார் 4 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், இந்தியா தற்போது சர்க்கரை நோயின் தலைநகரமாக மாறி வருகிறது. ஏராளமான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
அப்படியிருக்கும்போது, சர்க்கரை நோயாளிகள் வேலைவாய்ப்பை பெற முடியாதவர்கள் என்பதை ஏற்க இயலாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.
மேலும் புஷ்பத்துக்கு 8 வாரங்களுக்குள் பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவைப் பிறப்பித்தனர்.