ஹுப்பள்ளி: தார்வாட் நகரில் அமைந்துள்ள ஐஐடி வளாகத்தில் முழு வீச்சில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் ஐஐடி வளாகம் அமையவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய மனித வள அமைச்சகம் செய்து வருகிறது. தாற்காலிகமாக இந்த ஐஐடி கட்டடம், தார்வாட் நகரிலுள்ள நீர் மற்றும் நில நிர்வாக இன்ஸ்டிடியூட் (வால்மி) வளாகத்தில் அமையவுள்ளது.
இதற்கான இன்ஸ்டிடியூட் கட்டடங்களை புதுப்பித்தல் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தக் கட்டடத்தில் தான் தார்வாட் ஐஐடி-யின் முதல் பேட்ச் மாணவர்கள் பயிலவுள்ளனர்.
இந்தப் பணிகளை பம்பாய் ஐஐடி நிர்வாகத்தினர், மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஐஐடி நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணிகள் இங்கு வேகமாகவும், முழு வேகத்திலும் நடைபெற்று வருகின்றன.
கட்டடத்தின் சுவர்களை புதுப்பிக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறோம். மேலும் சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது.
முதல் சில ஆண்டுகளுக்கு ஐஐடி தார்வாட் வளாகம் இந்த வால்மி வளாகத்திலேயே செயல்படும். பின்னர் மம்மிகட்டி பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு மாற்றப்படும் என்றார் அவர்.