சென்னை: ஊரக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக என்ஐடி (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) மாணவர்கள் பாடுபடவேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை கவர்னர் அஜய்குமார் சிங் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள என்ஐடி-யில் நடைபெற்ற 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அஜய்குமார் சிங் பேசியதாவது:
நாட்டில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. ஊரக மக்களின் முன்னேற்றத்துக்காக, அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக என்ஐடி மாணவர்கள் பாடுபடவேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை அவர்கள் கண்டறியவேண்டும்.
மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின்கீழ் காரைக்காலில் உள்ள 5 கிராமங்களை புதுச்சேரி என்ஐடி தத்தெடுத்துள்ளது. இந்த முடிவு பாராட்டத்தக்கது. பட்டப்படிப்பு முடித்து செல்லும் என்ஐடி மாணவர்கள் புதுப்புது படைப்புகளை உருவாக்கவேண்டும்.
தரமான கல்வியை வழங்குவதில் புதுச்சேரி என்ஐடி உறுதி பூண்டுள்ளது.இதற்காக யூனியன் பிரதேச உயர் கல்வித் திட்டம் என்ற பெயரில் உயர்மட்டக் குழுவை புதுச்சேரி அரசு அமைத்துள்ளது என்றார் அவர்.