மும்பை: இனி புதிய பல் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி தரப்பட மாட்டாது என்று இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஏராளமான பல் மருத்துவ நிபுணர்கள் ஆண்டுதோறும் வெளிவருவதாலும், வேலைவாய்ப்புப் பற்றாக்குறையாலும் இந்த முடிவை பல் மருத்துவக் கவுன்சில் எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பல் மருத்துவக் கவுன்சிலின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தற்போது நாட்டில் 309 பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 26 ஆயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் படிக்கின்றனர். இதில் 8 ஆயிரம் டாக்டர்கள் படித்து முடித்து பல் டாக்டர்களாக வெளியே வருன்றனர். இதன்மூலம் ஆண்டுதோறும் ஏராளமான மருத்துவர்கள் வெளியே வருவதால் பல் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இத்தகவலை இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் உறுப்பினரும், அரசு பொது பல் மருத்துவக் கல்லூரியின் தலைவருமான டாக்டர் மன்சிங் பவார் தெரிவித்தார்.