டெல்லி பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் வரும் செப்டம்பர் 12ஆம் தேதியன்று நடைபெறவுள்ளதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 4-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில், வேட்புமனு கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும். போட்டியிட விரும்புவோர் டெல்லி பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்து வேட்புமனுவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு படிவங்கள் அந்தந்த துறைகளிலோ அல்லது டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனங்களிலோ கிடைக்கும். மாணவர் சங்க தேர்தல் தொடர்புடைய அனைத்து விவரங்களும் படிவங்களும் டெல்லி பல்கலைக்கழக இணையதளம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
காலை நேர வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் மாலை நேர வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
செப்டம்பர் 12ஆம் தேதி காலை 8.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை காலை நேர வகுப்பு மாணவர்களுக்கும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை மாலை நேர வகுப்பு மாணவர்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.