டெல்லி : டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஜி. படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சர்வர் பிரச்னை, மாணவர்களின் புகார் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த விண்ணப்பப் பதிவுத் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மே 30-ம் தேதி நள்ளிரவு வரை மாணவர்கள் பதிவு செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் மொத்தம் 66 வகையான பி.ஜி. படிப்புகளில் 8 ஆயிரம் இடங்கள் காலியாகவுள்ளன. இதில் 50 சதவீத இடங்களில் டெல்லி பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்களுக்காக ஒதுக்கப்படும்.
மீதமுள்ள இடங்கள் நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஒதுக்கப்படும்.
நுழைவுத் தேர்வு ஜூன் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும். நேர்முகத் தேர்வுகள் ஜூலை 4-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.
இதற்கான நுழைவுத் தேர்வுகள் டெல்லியைத் தவிர கொல்கத்தா, சென்னை, ஜம்மு, ஆமதாபாத், நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.