புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் விரைவில் ஆன்-லைனில் சேர்க்கை முறை கொண்டு வரப்படவுள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் இந்த ஆன்-லைன் சேர்க்கையைத் தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. 2016-ம் கல்வியாண்டில் பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆன்-லைன் சேர்க்கை முறையைக் கொண்டு வரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக 24 பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்துள்ளது. இந்தக் குழுவில் அறிவியல், வணிகம், கலைப் பிரிவுகளின் டீன்கள், 9 கல்லூரிகளின் முதல்வர்கள், பல்வேறு கல்விக் கவுன்சில்களின் உறுப்பினர்கள் இடம்பெற்று இருப்பர்.
இந்தக் குழு ஒன்று சேர்ந்து ஆன்-லைன் சேர்க்கைக்கான கொள்கையைத் தயாரித்து அடுத்த மாதம் வெளியிடும்.
இதுகுறித்து குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: சேர்க்கை முழுவதும் ஆன்-லைனில்தான் இனி செய்யப்படவேண்டும் என்று குழு உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு சோதனை முயற்சியாக ஆன்-லைன் சேர்க்கை பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் நேரடியாக வந்து விண்ணப்பங்கள் கொடுத்து சேரும் முறையும் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு முழுவதும் ஆன்-லைன் முறை கடைப்பிடிக்கப்படும் என்றார் அவர்.
இதற்கான அனுமதியையும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.