அரியலூர் மாணவி அனிதா நினைவாக புதிய செயலி ஒன்று இனியாள் என்னும் மாணவி மூலம் துவங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரியலூர் மாணவி அனிதா நினைவாக புதிய செயலி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஐபிஸ் அதிகாரி ஜெகதீசன் என்பவரது மகள் இனியாள் இந்த செயலியை உருவாக்கி உள்ளார். இனியாள் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
அனிதா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில் நீட் தேர்வின் மாதிரி வினாத்தாள்களும் அது தொடர்பான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ நினைத்து aNEETa செயலியை உருவாக்கியுள்ளேன், நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான தகவல்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன என மாணவி இனியாள் தெரிவித்துள்ளார்.