இந்தியாவில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தைத் தொடர்ந்து வடகிழக்கு தில்லியில் மார்ச் 7ம் தேதி வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு தில்லி பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் போராட்ட வன்முறையால் சேதமடைந்துள்ள நிலையில், உரிய நேரத்தில் ஆண்டு இறுதித் தேர்வை நடத்த முடியாமல் போகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தில்லி ஷாகீன்பாக் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு தில்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் கடுமையாக நடைபெற்று வருகிறது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தரப்பினர் இடையே நடைபெற்று வரும் மோதலால் தற்போது வரையில் தில்லியில் 46-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, வன்முறை பாதித்த பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கடைகள் மற்றும் வேலை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறை போராட்டம் நடைபெற்று வரும் வடகிழக்கு தில்லியில் மார்ச் 7-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தலைநகர் தில்லியில் வரும் மார்ச் 2-ம் தேதி திட்டமிட்டபடி 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்து, அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர காவல்துறை மற்றும் அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.