சென்னை: நடப்புக் கல்வியாண்டிலேயே டெல்லி பார்மசூட்டிக்கல் அறிவியல் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்(டிபிஎஸ்ஆர்யு) செயல்படும் என்று டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு வந்த டெல்லி பார்மசூட்டிக்கல் பல்கலைக்கழகம் டெல்லியில் தயாராகியுள்ளது. அங்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடப்புக் கல்வியாண்டிலேயே பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கும் என்றும் சேர்க்கை விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஆளுநர்கள் குழு இதற்கான முடிவை எடுத்திருப்பதாகவும் டெல்லி மாநில அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
டெல்லியில் பார்மசூட்டிக்கல் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று டெல்லி மாநில சட்டப் பேரவையில் 2008-ல் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தில்லி புஷ்ப விஹார் வளாகத்தில் இதற்கான கட்டட வேலைகள் நடைபெற்று வந்தன.
இப்போது கட்டட வேலைகள் நிறைவடைந்துள்ளன. பல்கலைக்கழகத்துக்கான 9 மாடிக் கட்டட வேலை மட்டும் பாக்கியுள்ளது. இது விரைவில் நிறைவடைந்துவிடும். அதன் பிறகு பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் பார்மசி பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பல்வேறு பார்மசூட்டிக்கல் பிரிவுகளில் பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லேப் டெக்னாலஜி, பிஸியோதெரபி போன்ற படிப்புகளை அறிமுகம் செய்ய டெல்லி பார்மசூட்டிக்கல் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. தற்போது 600 மாணவர்கள் படிக்கும் வகையில் கட்டமைப்புகள் உள்ளன. இது அடுத்த 3 ஆண்டுகளில் 1,500ஆக உயர்த்தப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.