டெல்லி: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் திருநங்கைகளும் பங்கேற்கும் வகையில் விண்ணப்பங்களில் திருநங்கைகள் என்று மூன்றாவது வாய்ப்பு ஒன்றை ஏன் ஏற்படுத்தவில்லை என்று கேட்டு மத்திய அரசுக்கும், யுபிஎஸ்சிக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் "இத்தேர்வு விண்ணப்பங்களில் ஆண், பெண் தவிர மூன்றாம் பாலினம் பற்றி குறிப்பிடப்படவில்லை, இதனால் திருநங்கைகள் விண்ணப்பிக்க முடியவில்லை" என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் முக்தா குப்தா, பி.எஸ்.தேஜி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருநங்கைகளை 3 ஆவது பாலினமாக சேர்க்க வலியுறுத்தியிருந்ததன் அடிப்படையில் சிவில் சர்வீஸ் தேர்வில் 3ம் ஆம் பாலினம் என்ற குறியீட்டினை ஏன் சேர்க்கவில்லை. திருநங்கைகளை தகுதி நீக்கம் செய்ய விரும்புகிறீர்களா?" என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்பங்களில் 3 ஆவது பாலினம் இல்லாததால் திருநங்கைகள் போட்டியிட இயலாத நிலை உள்ளது. இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்க ஜூன் 19 ஆம் தேதியே கடைசி நாளாகும்.
இந்த நிலையில், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஜூன் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளைக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் மத்திய பணியாளர் நலத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.