கொரோனா தொற்றினால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பெய்த கன மழையினால் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காற்று மாசு உள்ளிட்டவற்றின் காரணமாக தலைநகரில் திங்கட்கிழமை முதல் ஒரு வாரம் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என முதலமைச்சர் அறிவித்துள்ள சம்பவம் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திறக்கப்பட்ட பள்ளிகள்
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டது நாம் அறிந்ததே. சமீபத்தில் தொற்றின் பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்பிற்குச் சென்று வருகின்றனர்.
மீண்டும் மூடப்படும் பள்ளிகள்
இந்த நிலையில், தில்லியில், காற்று மாசு அதிகரித்து வருவதால் திங்கட்கிழமை முதல் (நவம்பர் 15), மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
புகை மண்டலமாக தில்லி
தில்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மிக மோசமாக குறைந்து வருகிறது. குறிப்பாக, அம்மாநிலம் முழுவதும் பகல், இரவு நேரங்களில் புகை மண்டலமாகக் காட்சியளித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லி மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், காற்று மாசு பிரச்சனை தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது.
ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு
இதனிடையே, தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, தில்லியில் காற்று மாசு மோசமாக உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த மாநில அரசு மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தேவைப்பட்டால், காற்று மாசைக் கட்டுப்படுத்த இரண்டு நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளுங்கள் என உத்தரவிட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரம் மிக மோசமானதைத் தொடர்ந்து, திங்கட்கிழமையிலிருந்து ஒரு வாரத்திற்கு, பள்ளிகளுக்கு மாணவர்கள் வரத் தேவையில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்தப்படும். மாநிலத்தில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அலுவலகங்களுக்கும் விடுமுறை
மேலும், அனைத்து அரசு அலுவலக ஊழியர்களும், வீட்டிலிருந்து பணிபுரியும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய வழிவகை செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அண்டை மாநிலங்களுக்கும் விடுமுறை
தில்லியைத் தொடர்ந்து ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஹரியானா அரசு குருகிராம், ஃபரீதாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறையினை அறிவித்துள்ளது.