கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கல்வி நிறுவனங்களைத் திறக்கமுடியாத சூழ்நிலையில் அனைத்துப் பல்கலைக் கழகத் தேர்வுகளையும் ரத்து செய்து தில்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது நீடித்து வருகிறது. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையும், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் கடுமையான ஊரடங்கு தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும் என மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்துப் பல்கலைக் கழக பருவத் தேர்வுகளையும் ரத்து செய்வதாக தில்லி அரசு அறிவித்துள்ளது. இதில் இறுதியாண்டு பருவத் தேர்வுகளும் அடங்கும் என தில்லி அரசு குறிப்பிட்டுள்ளது.
தில்லியில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் தில்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தில்லியைப் போன்றே தமிழகத்திலும் உள்ள பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு பருவத் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.