சென்னை: மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) நடப்புக் கல்வியாண்டில் சேர காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறும் நோக்கில் அரசு பல்வேறு நகரங்களில் ஐடிஐ-களை நடத்தி வருகிறது. மேலும் அரசு உதவி பெறும் ஐடிஐ-கள், சுயநிதி ஐடிஐ-களும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஐடிஐ-களில் மாணவர்கள் சேர வசதியாக காலக்கெடுவை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும், சுயநிதி நிலையங்களால் அரசுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்களில் சேர கவுன்சிலிங் நடத்தப்ட்டு வருகிறது.
ஐடிஐ-களில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் மாதம் 10- ஆம் தேதி வரை பெறப்பட்டன.
மேலும், ஐடிஐ-களில் காலியிடங்களை நிரப்பும் வகையில், ஜூலை 20- ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐடிஐ-களில் சேர விண்ணப்பித்த மாணவர்கள் வரும் 25- ஆம் தேதியன்று, அந்தந்த மாவட்டங்களில் நடைபெறவுள்ள கவுன்சிலிங்கில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.