சென்னை: இந்திய சிவில் சர்வீஸஸ் தேர்வில் சென்னை மாணவி மெர்சி ரம்யா 32-வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
2014-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று வெளியிட்டது. இந்தத் தேர்வில் தமிழகத்திலிருந்து 118 பேர் உள்பட மொத்தம் 1,236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சென்னை மாணவியான மெர்சி ரம்யா 32-வது ரேங்க் பிடித்து சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மேலும் தமிழக அளவில் இவர் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
வெற்றிச் செய்தி கிடைத்ததும் ரம்யா கூறியதாவது:
பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸை சென்னையில் படித்து முடித்தேன். அதன் பிறகு சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை எழுதி வந்தேன். இது எனது மூன்றாவது முயற்சி. இந்த முறை வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், பெண் கல்வியிலும் கவனம் செலுத்துவேன். ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த என்னால் முயன்றவரை முயற்சி செய்வேன் என்றார்.
இவரது தந்தை ஐசக் சாமுவேல் வழக்குரைஞராக உள்ளார். தாயார் பொன்முடி சுடரொளி.
புவியியல் பாடம் காரணமா?
இந்த ஆண்டு இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் புவியியல் பாடத்தைத் தேர்வு செய்தவர்கள் அதிகமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த சாருஸ்ரீ, மெர்சி ரம்யா உள்ளிட்டோர் புவியியலை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்தவர்கள். சாருஸ்ரீ அகில இந்திய அளவில் 6-வது இடத்தைப் பெற்று சாதனை படைத்தவராவார். இதேபோல மெர்சி ரம்யா புவியியலை விருப்பப் பாடமாகப் படித்து 32-வது ரேங்க் பிடித்தார்.
இதுகுறித்து மெர்சி ரம்யா கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளில் புவியியல் பாடம் எழுதிய யாரும் தேர்வாகவில்லை. இந்த முறை புவியியல் பாடம் சற்று எளிமையாக இருந்தது காரணமாக இருக்கலாம். அடுத்த ஆண்டு வேறு பாடம் எளிமையாக இருக்கும். ஆனால் நாம் எதற்கும் தயாராகச் செல்லவேண்டும் என்றார்.