கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துவித கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் கொரோனா பாதிப்புகளை கருத்தில்கொண்டு பள்ளிகளை திறப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?
குறிப்பாக, நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. இச்சூழ்நிலையில் பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளதால் மாநில அரசுகள் இந்த விசயத்தில் தயக்கம் காட்டி வருகின்றன.
செப்டம்பர் முதல் பள்ளிகள் திறப்பா?
இதனிடையே, தற்போதுள்ள ஊரடங்கானது வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
வகுப்பு நேரத்தைக் குறைக்க ஆலோசனை
மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களுடன் சமீபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, பள்ளிகள் செயல்படும் நேரத்தைப் பாதியாகக் குறைக்கலாம். பள்ளி வளாக தூய்மை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 5 பள்ளிகள் திறப்பு?
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போதுள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதிக்குப் பிறகு மாநில அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தி பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் என்ன நிலவரம்?
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க சாத்தியமில்லாத சூழலே நிலவி வருகிறது. இதுகுறித்த அறிவிப்பையும் அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
உத்தரவை மீறிய உத்தரப் பிரதேசம் பள்ளி
உத்திர பிரதேசத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அரசின் உத்தரவை மீறி மாதவ்கார் எனும் பகுதியில் உள்ள ஒரு பள்ளி திறக்கப்பட்டு சுமார் 40 மாணவர்கள் வருகை புரிந்த சம்பவம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்து சில மாதங்களுக்கு பள்ளி திறக்கப்படாது
தில்லியில், தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சூழல் இல்லை என அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா சமீபத்தில் அறிவித்தார். மேலும், தில்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என சுமார் 44 லட்சம் மாணவர்கள் உள்ள நிலையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அடுத்த சில மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களுக்கு முகக் கவசம் வழங்க முடிவு
பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும்பட்சத்தில் மாணவர்களுக்குச் சீருடை வழங்குவது போல, முகக்கவசங்களும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவ, மாணவிகளுக்கு தலா இரண்டு முகக்கவசங்கள் அளிக்க அம்மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
மாநிலங்களின் ஒருமித்த முடிவுகள்
அசாம், பீகார், மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் மாணவர்களின் நலனை மையமாகக் கொண்டும், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் பள்ளிகளை திறப்பது குறித்து பல்வேறுகட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், உடனடியாக பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் இறுதி முடிவெடுப்பார் என்று தெரிவித்தார். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லாத சூழலே நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications












